திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை நாளை (01) பொறுப்பேற்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் இன்று (31) ஏற்பாடு செய்யப்பட்டது. 2023.07.27 ஆம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன, மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார்.
மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதிலும், உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து செயற்படுவதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்.
இலங்கை நிருவாக சேவை திறந்த பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் 2000 -2006 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர், சிரேஸ்ட்ட உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், மின்சக்தி மற்றும்
வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment